உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் விடுதலை புலிகள்: கோத்தபயா

பல்வேறு நாடுகளில் உள்ள, விடுதலை புலிகளுக்கிடையே தொடர்பு இருப்பதால், மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கும் அபாயம் உள்ளது,'' என, இலங்கை பாதுகாப்பு செயலர், கோத்தபயா ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

"போருக்கு பிந்தைய இலங்கையின் நிலை' குறித்த கருத்தரங்கு, கொழும்பு நகரில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், பாதுகாப்பு செயலருமான, கோத்தபயா பேசியதாவது:தமிழகத்தில் தமிழர்கள் அதிகம் உள்ளதால், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே உறவு பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் அடிக்கடி கசப்புணர்வு ஏற்பட்டாலும், இருநாடுக்கிடையே உறவு பலமானதாக உள்ளது.இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில், மறைமுகமாக, இந்தியாவின் அரசியல் ஆதிக்கம் உள்ளது. 


இலங்கையில், சீனாவின் ஆதிக்கம், அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவுடன், பொருளாதார மற்றும் தூதரக உறவில் நெருக்கமாக உள்ளோம். சீனாவுடன் கொண்டுள்ள உறவு, மற்ற எந்த நாடுகளையும் அச்சுறுத்துவதற்கல்ல.இலங்கையில், முஸ்லிம் பயங்கரவாதத்தை, தூண்டும் முயற்சிகள் நடக்கின்றன. சில வெளிநாட்டு சக்திகள், இலங்கை முஸ்லிம்களை, சர்வதேச முஸ்லிம்களாக காட்டும் நோக்கில், உள்ளூரில், ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சிக்கின்றன.இதே போல, உலகம் முழுவதும் உள்ள, விடுதலை புலிகளிடையே தொடர்பு உள்ளது. அவர்கள் மூலம் இலங்கையில் மீண்டும், பயங்கரவாதம் தலை தூக்கும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம், தனி ஈழத்தை உருவாக்கி, இலங்கையை துண்டாட அந்த அமைப்பு முயற்சிக்கலாம்.கடந்த வாரம், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட, ஐ.நா.,மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை மூலம், விடுதலை புலிகள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க முனைந்துள்ளனர்.இவ்வாறு கோத்தபயா பேசினார்